படம்: https://www.instagram.com/p/DLwPM_lBSPk/
தமிழ்நாடு

'U' வடிவில் வகுப்பறை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

முதல் வரிசை மாணவர்கள், கடைசி வரிசை மாணவர்கள் எனும் எண்ணத்தைப் போக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.

கிழக்கு நியூஸ்

| Classrooms | Tamil Nadu School Education Department

தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் 'U' வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரளத்தில் அறிமுக இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் (Sthanarthi Sreekuttan). பள்ளிகளில் மாணவர்கள் வரிசைப்படி அமரவைக்கப்படும் முறையால், மாணவர்களிடையே உளவியல் ரீதியாக ஏற்படும் தாக்கம் குறித்து இப்படம் பேசியிருந்தது. அரைவட்ட அமர்வு முறையில் மாணவர்கள் அமரவைக்கப்பட்டிருக்கும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றிருந்தது. மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியர்கள் அமரும் வகையில் இந்த அமைப்பு இருக்கிறது. முதல் வரிசை மாணவர்கள், கடைசி வரிசை மாணவர்கள் எனும் எண்ணத்தைப் போக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.

இந்தப் படத்தின் எதிரொலியாக கேரளத்தில் சில பள்ளிகளில், பள்ளி மாணவர்கள் இதே முறையில் அமரவைக்கப்பட்டு வருகிறார்கள். மாணவர்கள் அமரவைக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் படத்தின் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத்தையும் டேக் செய்து வந்துள்ளார்கள். மாணவர்கள் அரைவட்ட அமர்வு முறையில் அமரவைக்கப்பட்டது தேசிய அளவில் கவனம் பெற்றது.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த முறை தற்போது அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் 'U' வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை (Tamil Nadu School Education Department) அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவுறுத்தலுக்கு சமூக ஊடகப் பக்கங்களில் எதிர்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. மாணவர்களின் கழுத்து மற்றும் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் அல்லது மருத்துவர்களின் கலந்தாலோசனை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன.