யுஜிசி அண்மையில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுமாறு 9 மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
டெல்லி, ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.20) அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது,
`பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள் 2025-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும், மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஜன.9-ல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டப்பேரவைகளிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். யுஜிசியின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல்.
இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம்.
எனது கோரிக்கையைப் பரிசீலித்து, தங்களது மாநில சட்டப்பேரவைகளில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்’ என்றார்.