தமிழ்நாடு

அம்மா உணவகங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் முதலைக் கண்ணீர்: எடப்பாடி பழனிசாமி

ராம் அப்பண்ணசாமி

அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சி செய்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்குக் கண்டனம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஜூலை 19-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அரசு விழாவை முடித்துவிட்டுத் தன் முகாம் அலுவலகத்துக்குத் திரும்பும் வழியில் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்துக்குச் சென்று அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிகழ்வுக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவரது அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:

`2021 மே மாதம் வரை, கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் நகரப் பகுதிகளில் வாழ்ந்த ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்னலட்சுமியாக செயல்பட்டு வந்தன. 2021-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அம்மா உணவகங்களை திமுக நிர்வாகிகள் இடித்துத் தள்ளினார்கள்.

அம்மா உணவகங்களை நடத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்காமல், உணவின் தரத்தை குறைத்து பல அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்தியது திமுக அரசு. (ஆனால்) தன் எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

ஜூலை 19-ல் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்வதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் முதல்வர். கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 19 அம்மா உணவகங்களை மூடியுள்ளது திமுக அரசு. இனியாவது வாய்ப்பந்தல் போடாமல் புதிய அம்மா உணவகங்களை தமிழக அரசு திறக்க வேண்டும்’.