தமிழ்நாடு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாற்பது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்தார்கள். ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதை ஏற்க மறுத்துவிட்டார்

ராம் அப்பண்ணசாமி

அதிமுக தொடர்ந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வரும் செப்.13-ல் நேரில் ஆஜராக சென்னை பாரிமுனையில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று (செப்.09) உத்தரவிட்டுள்ளது.

`கடந்த ஆட்சியின்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் சேரத் தயாராக இருந்தனர்’ என்று அப்பாவு பேசியதை எதிர்த்து எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயவேல் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.

கடந்த 2023-ல் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, `முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாற்பது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்தார்கள். ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதை ஏற்க மறுத்துவிட்டார்’ என்று பேசினார்.

சபாநாயகர் அப்பாவுவின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, இந்த வழக்கை எம்.பி எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அவதூறு வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 7-ல் விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 9-ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இன்று (செப்.09) அப்பாவு ஆஜராகாததால் செப்.13-ல் அப்பாவு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் மறு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.