தமிழ்நாடு

தீபாவளி: சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னைக்குத் திரும்ப சிறப்புப் பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 5.76 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

யோகேஷ் குமார்

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்குத் திரும்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 5.76 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

2024 தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதல்வர் உத்தரவிட்டார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, கடந்த 28.10.2024 முதல் 30.10.2024 ஆகிய 3 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,508 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,784 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5.76 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, 02.11.2024 முதல் 04.11.2024 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 3,405 பேருந்துகளும் என ஆக மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.