PRINT-91
தமிழ்நாடு

தமிழக ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது: விஜய்

தவெகவின் முதல் மாநில மாநாட்டில், சமூக நீதியைப் பின்பற்றும் மண்ணான தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

ராம் அப்பண்ணசாமி

தெலங்கானா உள்ளிட்ட பிற மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு முடிவை நடத்தி முடித்தும், தமிழ்நாடு அரசு அதை நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் தவெக தலைவர் விஜய் இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

`சுதந்திர இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். 2021-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தவெகவின் முதல் மாநில மாநாட்டில், சமூக நீதியைப் பின்பற்றும் மண்ணான தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம்.

மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. அப்படித்தான், பீஹார் மற்றும் கர்நாடக அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்து புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துள்ளன. மேலும், தற்போது தெலங்கானா மாநில அரசும் ஐம்பது நாட்களில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை (caste survey) நடத்தி முடித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூக நீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களை தமிழக அரசு பின்பற்றத் தயங்குவது ஏன்?

இத்தனைக்குப் பிறகும் தமிழக ஆட்சியாளர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் காரணமான போராட்டத்தை நடத்தி, இட ஒதுக்கீட்டில் இந்தியாவிற்கே வழிகாட்டியவர் தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார்.

'பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்' என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே அவரைப் பற்றிப் பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கு தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தமிழக ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா? அப்படியெனில், தெலுங்கானா மாநில அரசுக்கு மட்டும் அது சாத்தியமானது எப்படி?

எத்தனைக் கேள்விகள் கேட்டாலும், தற்போதைய ஆட்சியாளர்கள், அவற்றை அலட்சியப் போக்குடன் கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றார்.