சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த நகைகள் திருடப்பட்டதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், கோயில் காவலரான அஜித்குமாரை தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது காவல்துறையினர் அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியதை அடுத்து அவர் உயிரிழந்தார். இந்த லாக்கப் மரணம் தொடர்பான செய்தி பொது வெளியில் வெளியானதை அடுத்து பல்வேறு தரப்பினரும், தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அஜித்குமார் மரணம் தொடர்பாக தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வு முன்பு ஆஜரான அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர், இந்த லாக்கப் மரண விவகாரம் தொடர்பாக தாமாக முன்வைத்து விசாரணைக்கு எடுக்க கோரிக்கை வைத்தனர்.
அதற்கு, `கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் என்ன தீவிரவாதியா? சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் எதனால் தாக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்தால் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றனர்.
இதைத் தொடர்ந்து, காவலர் அஜித்குமாரின் லாக்கப் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை (ஜூலை 1) நடைபெறுகிறது.
இதற்கிடையே, இன்று (ஜூன் 30) மாலை, மடப்புரம் காளி கோயில், உதவி ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் ஆய்வு செய்தார்.