கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஜூன் 10 அன்று பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் ஜூன் 10-ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனினும், கடுமையான வெயில் பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என கல்வியாளர்கள், ஆர்வலர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 15 இடங்களில் வெயில் சதமடித்தது.

மேலும், ஜூன் 4-ல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. ஜூன் 6 பள்ளிகள் திறப்பு என்றால், தேர்தல் முடிவுகள் வெளியாவதன் காரணத்தினால், வெளியூரிலிருந்து ஊர் செல்வோர் பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம் என்றும் ஒரு பார்வை வைக்கப்பட்டது.

புதுச்சேரியிலும் ஜூன் 6-ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், வெயில் காரணமாக ஜூன் 12-ல் பள்ளிகள் திறக்கப்படும் என மாற்றி அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-க்கு பதில் ஜூன் 10-ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.