தமிழ்நாடு

சவுக்கு சங்கர் வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை

கிழக்கு நியூஸ்

சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளார்.

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்கள். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட, அவரும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவருடையத் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இந்த வழக்கிலிருந்து மட்டும் இடைக்காலப் பிணை வழங்கி, இதுதொடர்புடைய வழக்கை உயர் நீதிமன்றத்தில் விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் முறையிடப்பட்டது.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் தொடர்புடைய ஆட்கொணர்வு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம், இரண்டாவது முறையாக இந்த வழக்கின் விசாரணை அமர்வு மாற்றப்படுகிறது. எனவே, வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.