போக்குவரத்துத் துறை 
தமிழ்நாடு

பேருந்தில் காவலர்கள் பயணச்சீட்டு இன்றி பயணிக்க முடியாது: போக்குவரத்துத் துறை

யோகேஷ் குமார்

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நாகர்கோயிலில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி என்பவர் காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது எனக் கூறி வாக்குவாதம் செய்தது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இதைத் தொடர்ந்து அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், “அரசுப் பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பயணச்சீட்டு எடுத்து தான் பயணிக்க வேண்டும். நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.