தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisai4BJP
தமிழ்நாடு

ஸூம் மீட்டிங்கில் விஷமிகள் குறுக்கீடு: தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் தமிழிசை சௌந்தரராஜன்.

யோகேஷ் குமார்

ஸூம் மீட்டிங்கில் சில விஷமிகள் குறுக்கிட்டதாக தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், ஸூம் மீட்டிங்கில் மூலம் மக்களை சந்தித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அதில் சில விஷமிகள் குறுக்கிட்டதாக, அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

“நான் பிரசாரம் செய்வதற்காக நேரில் செல்லும்போது பலரையும் சந்தித்து பேசுகிறேன். ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சில நண்பர்களைச் சந்தித்து பேச முடியவில்லை என்பதால் ஸூம் மீட்டிங்கில் அவர்களுடன் பேசலாம் என நினைத்தேன்.

இந்நிலையில் இன்று ஸூம் மீட்டிங்கில் மக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆபாசமான படங்களை ஸூம் மீட்டிங்கில் பரவ விட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்” எனக் கூறி வாக்கு சேகரித்துள்ளார்.

இது குறித்த காணொளியை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.