தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் தரிசனத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி!

கிழக்கு நியூஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனத்தை நிறைவு செய்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை வந்த பிரதமர் மோடி இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று (சனிக்கிழமை) காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். கொள்ளிடம் ஆற்றுக்கு அருகே அமைக்கப்பட்ட தற்காலிக இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து கார் மூலம் கோயிலைச் சென்றடைந்தார் பிரதமர் மோடி.

ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து பிரதமர் மோடியை வரவேற்றார்கள். கோயிலில் கம்பராமாயணம் பாடப்பட்டது. இதைப் பிரதமர் மோடி கேட்டு ரசித்தார். பிறகு கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் சற்று முன்பு தரிசனத்தை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் புறப்படும் பிரதமர் மோடி, பிற்பகல் 2 மணிக்கு அங்கு சென்றடைகிறார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இதுவரை எந்தவொரு பிரதமரும் வந்ததில்லை. இங்கு சென்றுள்ள முதல் பிரதமர் நரேந்திர மோடி.