தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றார். அங்கு ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்றார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமருக்குக் கோவில் நிர்வாகம் சார்பாகப் பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்றார். அங்குள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் பிரதமர் புனித நீராடினார்.

ராமேஸ்வரத்தில் இன்றிரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார் மோடி. 11 நாள்கள் விரதம் இருந்து வருவதால் அதற்கான ஏற்பாடுகளும் அங்குச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை அரிச்சல் முனையிலுள்ள கோதண்டராமர் கோவிலில் பிரதமர் வழிபடுகிறார்.