மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் பேச்சு  
தமிழ்நாடு

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு விரும்புகிறது: மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் பேச்சு | PM Modi |

திமுக அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்குகிறது....

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-

பாஜக - தேஜகூ ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்

”தமிழ்நாட்டின் வளர்ச்சி நாயகர் எம்ஜிஆரின் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து மதுராந்தகத்தின் ஏரி காத்த ராமரை நான் வணங்குகிறேன். தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன். மதுராந்தகத்தில் அலைகடலென மக்கள் திரண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது. தமிழ்நாடு இப்போது பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தமிழ்நாடு விரும்புகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பத்தின் மூத்த தலைவர்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க குழுமியிருக்கிறார்கள். பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி டபுள் என்ஜின் அரசு நிச்சயம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்.

திமுக வாக்குறுதிகள் பூஜ்ஜியம்தான்

ஆட்சி செய்ய திமுகவுக்கு இரண்டு முறை வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக. ஆனால், ஆற்றியது என்னமோ பூஜ்ஜியம்தான். தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட அரசு இருக்கிறது என்றால், இங்கு ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை. திமுக அரசாங்கம் ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்குகிறது.

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது காங். திமுக கூட்டணி

2014-க்கு முன்பு, திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது அப்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியைத் தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தார்கள். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தான் சட்டரீதியாக தடை நீக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டோம்.

போதையிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும்

தமிழ்நாட்டில் இளைஞர்களின் தாய், தந்தையர், தங்கள் குழந்தைகள் போதைப் பொருள்களுக்கு நாசமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது இளைஞர்களை போதைப் பொருள் அபாயத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும். என்டிஏவுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழ்நாட்டை போதைப் பொருட்களில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும். திமுக அரசாங்கத்தில் போதைப் பொருள் பெருங்குற்றவாளிகளும் மதுபான பெருங்குற்றவாளிகளும் செழிப்பாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியோ மக்களின் உடல் நலத்தில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது” என்றார்.

Prime Minister Modi said at the Madhurantakam meeting that the people want a National Democratic Alliance government in Tamil Nadu.