மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு  ANI
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்: பியூஷ் கோயல் | Piyush Goyal |

வெறுப்புப் பேச்சுகளுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைவர் என்று கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வெறுப்புப் பேச்சுகளுக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவுள்ள நிலையில், இன்று பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி வீட்டில் விருந்து

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பியூஷ் கோயல் காலை உணவு அருந்தினார். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த விருந்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-

எடப்பாடிதான் கூட்டணியின் தலைவர்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவருடன் காலை உணவு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நல்வாழ்த்துகளை நான் எடப்பாடி பழனிசாமியுடன் பகிர்ந்துகொண்டேன்.

திமுக தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை

மத்தியில் பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி திமுக அரசை முற்றிலுமாக அகற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஊழல் நிறைந்த, திறமையற்ற, வளர்ச்சிக்கு எதிரான திமுக அரசு நிச்சயமாக இந்தத் தேர்தலில் தோற்கப் போகிறது. ஏனென்றால், திமுக அரசு தமிழ்நாட்டின் நலனுக்கும் செழிப்புக்கும் எதுவும் செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மாநிலத்தில் உட்கட்டமைப்பு சீரழிந்து வருகிறது, தவறான நிர்வாகம், ஊழல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவையே திமுகவின் தனிச்சிறப்புகளாக உள்ளன.

உதயநிதி மீது நடவடிக்கை

தேச விரோத கருத்துக்களுக்காக உதயநிதி ஸ்டாலினை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். நேற்று, உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக உயர் நீதிமன்றமும் கடுமையான கண்டனங்களை வெளியிட்டது. உதயநிதி தெரிவித்து வரும் வெறுப்புப் பேச்சுகளுக்காகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடி வருகை

நண்பர்களே, நாளை (ஜன. 23) தமிழ்நாட்டிற்குப் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதை எண்ணி மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். ஒரு பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மக்கள் பிரதமர், எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக தலைமையிலான வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க உற்சாகமாக வருகை தரவுள்ளனர்.

தமிழ்நாடு முதன்மை மாநிலம் ஆகும்

இந்தக் கூட்டணி ஏப்ரல் மாதம் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும். நாங்கள் வளர்ச்சியைக் கொண்டுவருவோம், உள்கட்டமைப்பைக் கொண்டுவருவோம், நல்லாட்சியைக் கொண்டுவருவோம், தமிழ்நாட்டுப் பெண்களுக்காக, தமிழ்நாட்டு குழந்தைகளுக்காக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக, மீனவர்களுக்காக, விவசாயிகளுக்காக, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் பாடுபடுவோம், இதனால் தமிழ்நாடு மீண்டும் நாம் அனைவரும் பெருமைப்படும் ஒரு புகழ்பெற்ற மாநிலமாக மாறும். தமிழ் கலாசாரத்தையும், தமிழினப் பெருமையையும் மீட்டெடுப்போம், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்றுவோம்” என்றார்.

Union Minister Piyush Goyal said that Edappadi Palaniswami is the leader of the BJP alliance in Tamil Nadu and said that action should be taken against Deputy Chief Minister Udhayanidhi Stalin for hate speech.