ANI
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததால் சர்ச்சை: ஓபிஎஸ் விளக்கம்! | OPS | MK Stalin | Alliance

நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், திமுகவில் இணையப்போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாகப் பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டுள்ளனர்.

ராம் அப்பண்ணசாமி

தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தேன் என்றும், இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை என்றும் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஜூலை 31 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்ட நிலையில், இது தொடர்பாக இன்று (ஆக. 4) வெளியிட்ட அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது,

`மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.

இந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன்.

இந்த சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை திமுகவின் 'B' Team என்றும், நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும், திமுகவில் இணையப்போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் போவை பொதுத்தேர்தலில் அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நான் முதலமைச்சர் அவர்களை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியான `பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது.

அடுத்தபடியாக, சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்‌ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08-2024 அன்றே நான் அறிக்கை வெளியிட்டவன்.

இதேபோன்று, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25-06-2025 அன்று நான் அறிக்கை வெளியிட்டவன். அம்மாவை பாஜகவின் முன்னாள் தலைவர் விமர்சித்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று நான் அறிக்கை வெளியிட்டவன்.

இதேபோன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவுசெய்து இருக்கிறேன். இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன்.

நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் அம்மாவின் வழியில் செயல்படக்கூடியவன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.