ஓ. பன்னீர்செல்வம் - கோப்புப்படம் 
தமிழ்நாடு

இந்து முன்னணியின் செயல் கண்டனத்திற்குரியது: ஓ. பன்னீர்செல்வம்

தந்தை பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்தி, தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

ராம் அப்பண்ணசாமி

முருக பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த இந்து முன்னணிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து, முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முருக பக்தர்கள் மாநாடு மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் மறைமுகமாக விமர்சிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது,

`பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி, தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து, பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை அமைத்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரை தொடர்ந்து, போறிஞர் அண்ணா காட்டிய வழியில் நான்கு முறை அதிமுக ஆட்சியை அமைத்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மதிக்கப்பட்டனர், போற்றப்பட்டனர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருகிறோம்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி காணொளி வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது’ என்றார்.