தமிழ்நாடு

சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம்

கிழக்கு நியூஸ்

சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கருத்து தெரிவித்தது. இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 9 அன்று உத்தரவு பிறப்பித்தது. வேறு ஏதேனும் வழக்கு இல்லாதபட்சத்தில் சவுக்கு சங்கரை விடுதலை செய்யலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாள்களில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனியில் கஞ்சா வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தனக்கு எதிரான அனைத்து 17 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது.

அப்போது சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையின்போது, சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான பாலாஜி ஸ்ரீனிவாசன், சவுக்கு சங்கர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, இவருடைய கைது நடவடிக்கை உத்தரவை ரத்து செய்யதாகிவிட்டதே என்றார். இதற்கு, "ஆம், அனைத்து வழக்குகளிலும் பிணை பெற்றுவிட்டேன். தற்போது மீண்டும் நேற்று கைது செய்துள்ளார்கள்" என்று சவுக்கு சங்கர் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம் என்றார் தலைமை நீதிபதி. மேலும், "சவுக்கு சங்கர் வழக்கு தொடர்புடைய அனைத்து 16 வழக்குகளிலும் பாதுகாப்பு வழங்கியுள்ளோம். சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் பட்டியலிட்டு சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறி சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் சவுக்கு சங்கர் தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக பதிலளிக்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.