விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

என்டிடிவி செய்திக் குழுவைச் சந்தித்த விஜய்: பேசியது என்ன? | TVK Vijay |

நான் கிங் மேக்கராக அடையாளப்படுத்தப்பட விரும்பவில்லை....

கிழக்கு நியூஸ்

தேர்தலில் நான் வெல்வேன் கிங் மேக்கராக அடையாளப்படுத்தப்பட விரும்பவில்லை என்று விஜய் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

என்டிடிவி செய்தி ஊடகம் சார்பில் சென்னையில், என்டிடிவி தமிழ்நாடு உச்சி மாநாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கெடுத்து அரசியல் களம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்தனர்.

அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட பலரும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

விஜயைச் சந்தித்த செய்திக்குழு

அதன்பின் என்டிடிவி குழு தவெக தலைவர் விஜயைச் சந்தித்ததாகத் தெரிகிறது. அவருடன் என்டிடிவியின் ஆசிரியர் குழு மேற்கொண்ட கலந்துரையாடல் குறித்த செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை ஊடகங்களுக்கு நேரடியாக விஜய் நேர்காணல் அளிக்காத நிலையில், என் டிடிவி குழுவைச் சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

என்ன சொன்னார் விஜய்?

என்டிடிவி முதன்மை செய்தியாசிரியர் ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் ஷிவ் அரூர், அரசியல் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோர் விஜயுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர். அப்போது விஜய் கூறியதாவது:-

“கரூர் சம்பவம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதன் தாக்கம் இன்றுவரை என்னைப் பாதித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. எனது எதிர்காலம் அரசியல்தான் என்ற தெளிவுடன் நான் இருக்கிறேன். ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் வருத்தமளிக்கிறது. படத்தின் தயாரிப்பாளர்தான் அதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், நான் அரசியலுக்கு வந்த உடனேயே என் படங்களுக்கு இத்தகைய நெருக்கடி வரும் என்று நான் முன்னரே யூகித்தேன். நான் ஷாருக் கானின் ரசிகன். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எனது முன்னோடிகள். நான் கிங் மேக்கராக அடையாளப்படுத்தப்பட விரும்பவில்லை. நான் தேர்தலில் வெல்வேன். எனக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தீர்கள் அல்லவா” என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். தனது ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றுவதில் விஜய் முனைப்புடன் உள்ளதாகக் கூறியிருக்கும் என்டிடிவி குழு, அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் போராடவுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

NDTV reported that Vijay said that,"I don't want to be identified as King Maker. I will win"