பேருந்தை நிறுத்தவில்லையெனில் புகார் அளிக்கலாம்: எம்டிசி
பேருந்தை நிறுத்தவில்லையெனில் புகார் அளிக்கலாம்: எம்டிசி @MtcChennai
தமிழ்நாடு

பேருந்தை நிறுத்தவில்லையெனில் புகார் அளிக்கலாம்: எம்டிசி

யோகேஷ் குமார்

சென்னையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 700 -க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஒரு சில இடங்களில் பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை எனக் கூறி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இனி இவ்வாறு நடந்தால் உடனடியாக பேருந்தின் வழித்தடம் எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண் போன்ற விவரத்தை, கட்டணமில்லா தொலைபேசி எண் 149-க்கு அழைத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து எங்கிருந்து எங்கு செல்கிறது, நேரம் மற்றும் நிறுத்தாமல் சென்ற பேருந்து நிறுத்தத்தின் பெயரையும் தெரிவித்து புகார் அளிக்கலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மாநகர பேருந்துகள் வந்து செல்லும் நேரத்தைப் பயணிகள் எளிதாக அறியும் வகையில் டிஜிட்டல் பலகை பொருத்தப்பட உள்ளதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.