தமிழ்நாடு

நாட்டின் தொழில்துறை வேலைவாய்ப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | Tamil Nadu | MK Stalin

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாக மீண்டும் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

ராம் அப்பண்ணசாமி

2023-24-ம் ஆண்டில் நாட்டின் தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளை மேற்கோள்காட்டி முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆக. 27) 2023–24-ம் ஆண்டுக்கான வருடாந்திர தொழிற்சாலைகள் கணக்கெடுப்பை (Annual Survey of Industries) மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், வெளியிட்டுள்ளது. இதன்படி தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு (15%), குஜராத் (13%), மஹாராஷ்டிரம் (13%), உத்தர பிரதேசம் (8%) மற்றும் கர்நாடகம் (6), ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று (ஆக. 28) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,

`வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

இன்று வெளியிடப்பட்ட 2023–24-ம் ஆண்டுக்கான இந்திய அரசின் வருடாந்திர தொழிற்சாலைகள் கணக்கெடுப்பின்படி, தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் சுமார் 15.24% (மாநிலத்தில்) உள்ளனர்!

நாட்டின் ஒவ்வொரு ஆறு தொழிற்சாலை தொழிலாளர்களில் ஒருவர் தமிழகத்தில் உள்ளனர், இது இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 5-6% ஆகும்!

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமாக மீண்டும் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது, 40,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன, இது தேசிய பங்கில் 15.43% ஆகும்.

எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் அரசியல் ரீதியான பொய்க்கும், அவர்களில் சிலர் எழுப்பும் கேள்விகளுக்கும் இதுவே சிறந்த மறுப்புச் செய்தி... இது எங்களது தரவு அல்ல... ஆனால் மத்திய அரசின் தரவு..’ என்றார்.

இந்த பதிவை மேற்கோள்காட்டி, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 28) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது,

`திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! அமித் ஷா முதல் பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பாஜக அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!

திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!’ என்றார்.