தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: இரு சட்டமுன்வடிவுகள் அறிமுகம்

"பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது."

கிழக்கு நியூஸ்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் இரு சட்டமுன்வடிவுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

சட்டமுன்வடிவுகள் குறித்து முதல்வர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை:

"பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.

அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. 86 விழுக்காட்டுக்கு மேலான வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான்.

அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகையக் கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.

இந்த வகையில், பிஎன்எஸ் சட்டத்தின் கீழும், நமது மாநில அரசு சட்டங்களின் கீழும் ஏற்கெனவே இத்தகையக் குற்றங்களுக்குத் தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது.

இதன் அடிப்படையில், இத்தகையக் குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்கு பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்துக்கும், தமிழ்நாடு 1998-ம் ஆண்டு பெண்ணுக்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்யும் சட்டத்திருத்தத்துக்கும், சட்டமுன்வடிவுகளை பேரவையின் ஒப்பதலுக்காக முன்வைக்கிறேன்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.