கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் அவதூறு வழக்கு

கிழக்கு நியூஸ்

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முதல்வரின் நற்பெயருக்குக் களங்கும் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கடத்தல் விவகாரம் வெளியில் வந்ததிலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் ஜாஃபர் சாதிக் புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன. தொடர்ந்து, இவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில், போதைப் பொருள்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக இருவர் மீது கிரிமினல் அவதூறு வழக்குச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.