கோப்புப்படம் 
தமிழ்நாடு

நீட் தேர்வு குழப்பங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்

கிழக்கு நியூஸ்

மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை நீட் தேர்வு குழப்பங்கள் வெட்டவெளிச்சமாக்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. சமீபத்திய நீட் தேர்வில் என்சிஇஆர்டி புத்தகங்களில் இடம்பெற்ற தவறான தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் பதிலளித்த காரணத்தாலும், நேரம் வீணான காரணத்தாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் முழுமையாக 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். ஹரியாணாவில் குறிப்பிட்ட ஒரு மையத்திலிருந்து மட்டும் 6 பேர் 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள்.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள். தேசிய தேர்வு முகமை இதை மறுத்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டுமொரு முறை நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எக்ஸ் தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அவருடைய எக்ஸ் தளப் பதிவு:

"சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

  • நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

  • அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.

  • சமூகநீதிக்கு எதிரானவை.

  • தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.