புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் | MK Stalin |

கந்தர்வகோட்டை ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்பது உட்பட 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்...

கிழக்கு நியூஸ்

தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார். அதில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது கூறியதாவது:-

“தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை நிச்சயம் கிடைக்கும். நான் உறுதியோடு சொல்கிறேன். திமுகவால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என அதிமுக கூறியது. மகளிருக்கு ரூ. 1000 எதற்கு என்று தேவையில்லாமல் சிலர் பேசுகிறார்கள். ஆனால் இது எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் சீர் எனச் சகோதரிகள் பதில் சொல்கிறார்கள்.

இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சோம்பேறி ஆக்குகிறோம் என்று குற்றம்சாட்டிய பாஜகவே அவர்கள் ஆளும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள். நமது விடியல் பயணத் திட்டமும் பல மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்படுகிறது. இப்போது உலக நாடுகள் பின்பற்றுகின்றன. நியூயார்க் மாநகர மேயர் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து வாக்குறுதி கொடுத்து ஸோரான் மம்தானி அங்கு ஜெயித்திருக்கிறார்.

தேர்தல் நெருங்கி வந்திருக்கிறது. இப்போதே தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன. இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று நீங்கள் உறுதி செய்துகொள்ளுங்கள். அதுதான் முக்கியம். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உங்களுடைய வாக்குகள் நீக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அறந்தாங்கி வட்டத்தில் உள்ள வீரகொண்டான் ஏரி, செங்கழுநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ. 15 கோடி செலவில் புணரமைக்கப்படும். கீரமங்களம் பகுதி விவசாயிகளின் நலன்கருதி அப்பகுதியில் சாகுபடி செய்யப்படும். காய்கறி, பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்திட குளிர்பதன கிடங்கு ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும். வடகாடு ஊராட்சியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் உயர் நிலை பாலங்கள் கட்டப்படும். கந்தர்வகோட்டை ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். பொன்னமராவதி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்றார்.

Chief Minister M.K. Stalin announced that the women's rights allowance will definitely be provided soon to all eligible individuals.