செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ரூ. 10,000 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த திட்டம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் ஐஐடி பல்கலைக்கழகத்தின் இயக்குநர் காமகோடி மற்றும் சர்வம் செயற்கை தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர் ப்ரத்யூஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:-
ரூ. 10,000 கோடிக்கு ஒப்பந்தம்
“முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தினந்தோறும் தமிழ்நாட்டில் புதிய திட்டங்கள் அறிமுகப்படு த்தப்பட்டு வருகின்றன. உலகத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு நோக்கி நகர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் எந்தவித பாதிப்புகள் ஏற்படும் என்று மக்களிடையே கவலை இருக்கும் நிலையில், அதன்மூலம் வேலைவாய்ப்புகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் சர்வம் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த முதலீடு ஆயிரம் பேருக்கு உயர் தொழில்நுட்ப பணிகளை வழங்கும் முன்னெடுப்பு.
செயற்கை நுண்ணறிவில் தமிழ்நாடு முன்னிலை
இது தமிழ்நாட்டு வரலாற்றில், தமிழ் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் ஒரு திருப்புமுனைத் திட்டம். தமிழ் செயற்கை நுண்ணறிவை முழுமையாக கருத்தில் கொண்டு நமது அரசு இப்பணியில் இறங்கியிருக்கிறது. இந்திய அளவில் முதன்முறையாக நமது தரவுகளை நாமே பாதுகாக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கப்படவுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் தரவுகள் தமிழ்நாட்டிடம் மட்டுமே இருக்கும். இதைக் கொண்டு அரசின் அடுத்தகட்ட வளர்ச்சிகளைத் திட்டமிட முடியும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அப்போது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்” என்றார்.
விரைவில் செயற்கை நுண்ணறிவு தரவுத்தளம்
தொடர்ந்து ஐஐடி இயக்குநர் காமக்கோடி பேசியதாவது:-
“இன்று ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவின் இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்தில் தொடங்கி, மருத்துவம், கல்வி, மேலாண்மை, உற்பத்தி என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு நமக்கு உதவி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவு மூலம் அதிக அளவிலான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை ஒருங்கிணைத்து அதன்மூலம் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கம்தான் இப்போது கையெழுத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடித்தளம். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு தரவுத் தளத்தை அமைப்பதற்கும் திட்டமிருக்கிறது. அதன்மூலம் அரசு ஒரு நலத்திட்டத்தை அறிவிக்கும் சூழலில் பலதரப்பட்ட தரவுகளைப் பகுத்தாயும் வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.
Minister TRB Rajaa has announced that the Tamil Nadu government has signed a memorandum of understanding worth Rs 10,000 crore with an artificial intelligence company.