அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு | Anbil Mahesh |

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை...

கிழக்கு நியூஸ்

பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியத்தை ரூ.15,000 ஆக உயர்த்தவுள்ளதாகவும், மே மாதத்தில் மட்டும் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கணினி அறிவியல் ஆசிரியர்கள் என்பவர்கள் உட்பட மொத்தம் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், போனஸ், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறத்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் கடந்த ஜனவரி 8 முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பகுதி நேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை

இந்நிலையில், இன்று காலை பகுதிநேர ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஆசிரியர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும், சில கோரிக்கைகளைப் பரிசீலிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எஸ்எஸ்ஏ திட்டத்தில் ரூ.3,548 கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது. ஆனால் மத்திய அரசு அதைத் தொடர்ந்து தர மறுக்கிறது. எனினும் ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் உறுதுணையாக அரசு இந்த செலவினங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.

ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த முடிவு

பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்று விரும்பி அவர்களுக்கான ஊதியம் மேலும் ரூ. 2,500 உயர்த்தப்படுகிறது. அதன்படி பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15,000 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் இனி மே மாதத்தில் ரூ.10,000 ஊதியமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பணி நிரந்தரக் கோரிக்கை ஆலோசிக்கப்படும்

இந்தப் போராட்டத்தின்போது இத்தனை காலத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு ஏதேனும் நிவாரணம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். அது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். மருத்துவக் காப்பீடு தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், பணி நிரந்தரம் என்பது அவர்களின் பிரதான கோரிக்கை. அது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.” என்றார்.

Minister Anbil Mahesh has announced that the salary of part-time teachers will be increased to Rs. 15,000, and that a salary of Rs. 10,000 will be paid in the month of May alone.