மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுந்தரேசனைப் பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல் துறை உயர் அதிகாரிகள் மீது டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம்சாட்டிய நிலையில், இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த நவம்பர் 2024 முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாகப் பணிபுரிந்து வந்தார். சட்டவிரோதமாக மது மற்றும் சாராயக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது டிஎஸ்பி சுந்தரேசன் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 17 அன்று துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இவருடைய வாகனம் பறிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிஎஸ்பி சுந்தரேசன் தனது அலுவலகத்துக்கு நடந்து சென்றிருக்கிறார். இவர் நடந்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிகளவில் பரவியது.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தரேசன் கூறியதாவது:
"கடந்த 5 அன்று அமைச்சரின் பாதுகாப்புப் பணிக்காக எனது வாகனத்தை மாவட்டக் காவல் துறை தரப்பில் கேட்டார்கள். எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பித்தால் வாகனத்தை வழங்குவதாகத் தெரிவித்தேன். இதனால், என்னை திருச்செந்தூர் கும்பாபிஷேக பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு, முதல்வர் வருகை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினார்கள்.
அந்தப் பணியை முடித்துவிட்டு திரும்பியபோது, அமைச்சர் பாதுகாப்புப் பணிக்கு எனது வாகனத்தைத் தருமாறு மீண்டும் கேட்டார்கள். அந்த வாகனம் அவ்வப்போது பழுதாவதாகக் கூறியதையும் கேட்காமல், கடந்த 10 அன்று வாகனத்தை வாங்கிக் கொண்டார்கள். இதுவரை அந்த வாகனத்தைத் திரும்ப வழங்கவில்லை. இதனால் 2 நாள்களாக அலுவலகத்துக்கு நடந்தே சென்றேன்.
நான் பொறுப்பேற்றது முதல் சாராயம், புதுச்சேரி மது விற்பனையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததால், சிலரது வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டது. நான் நேர்மையாக இருப்பதால் பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கிறேன். மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றியபோது, ஒரு வழக்கில் தொடர்புடைய காவல் துறையைச் சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்ததால், என்னைப் பழிவாங்குகிறார்கள்" என்றார்.
மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், காவல் ஆய்வாளர் பாலசந்தர் ஆகியோர் மீது சுந்தரேசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து, சுந்தரேசனின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும், மாவட்டக் காவல் துறையில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக அவர் கூறியது தவறான தகவல் என்றும் விளக்கமளித்தார்.
டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடைநீக்கம் செய்யப்படலாம் என சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசனைப் பணியிடைநீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
DSP Sundaresan | Mayiladuthurai DSP