கோப்புப்படம் 
தமிழ்நாடு

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம்! | DSP Sundaresan

காவல் துறை உயர் அதிகாரிகள் மீது டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம்சாட்டிய நிலையில், இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு நியூஸ்

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுந்தரேசனைப் பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல் துறை உயர் அதிகாரிகள் மீது டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம்சாட்டிய நிலையில், இன்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த நவம்பர் 2024 முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாகப் பணிபுரிந்து வந்தார். சட்ட​விரோதமாக மது மற்றும் சாராயக் கடத்​தலில் ஈடுபடு​வோர் மீது டிஎஸ்பி சுந்தரேசன் கடும் நடவடிக்​கைகளை மேற்கொண்டு வரு​வதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 17 அன்று துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இவருடைய வாகனம் பறிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிஎஸ்பி சுந்தரேசன் தனது அலுவலகத்துக்கு நடந்து சென்றிருக்கிறார். இவர் நடந்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிகளவில் பரவியது.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தரேசன் கூறியதாவது:

"கடந்த 5 அன்று அமைச்​சரின் பாது​காப்புப் பணிக்​காக எனது வாக​னத்தை மாவட்டக் காவல் துறை தரப்​பில் கேட்​டார்​கள். எழுத்து​பூர்​வ​மாக உத்தரவு பிறப்பித்தால் வாக​னத்தை வழங்குவதாகத் தெரி​வித்​தேன். இதனால், என்னை திருச்​செந்​தூர் கும்​பாபிஷேக பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பி ​வைத்​தார்கள். அதன்பிறகு, முதல்​வர் வருகை பாது​காப்​புப் பணிக்கு அனுப்பினார்கள்.

அந்​தப் பணியை முடித்​து​விட்டு திரும்​பிய​போது, அமைச்​சர் பாதுகாப்புப் பணிக்கு எனது வாக​னத்தைத் தரு​மாறு மீண்​டும் கேட்டார்கள். அந்த வாக​னம் அவ்வப்போது பழு​தாவ​தாகக் கூறியதை​யும் கேட்​காமல், கடந்த 10 அன்று வாக​னத்தை வாங்​கிக் கொண்டார்கள். இது​வரை அந்த வாக​னத்தைத் திரும்ப வழங்கவில்லை. இதனால் 2 நாள்​களாக அலு​வல​கத்​துக்கு நடந்தே சென்​றேன்.

நான் பொறுப்​பேற்​றது முதல் சாரா​யம், புதுச்​சேரி மது விற்பனையைக் கட்டுக்குள் கொண்டு வந்​த​தால், சிலரது வருமானம் பாதிக்​கப்​பட்​டு​விட்​டது. நான் நேர்மையாக இருப்பதால் பல்​வேறு சிக்​கல்​களை அனுபவிக்​கிறேன். மனித உரிமை ஆணை​யத்​தில் பணி​யாற்​றிய​போது, ஒரு வழக்​கில் தொடர்புடைய காவல் துறையைச் சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்​த​தால், என்னைப் பழி​வாங்​கு​கிறார்​கள்" என்றார்.

மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், காவல் ஆய்வாளர் பாலசந்தர் ஆகியோர் மீது சுந்தரேசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, சுந்தரேசனின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎஸ்பி சுந்​தரேசனின் வாக​னம் பெறப்​பட்​ட​தில் முறையான நடைமுறை​கள் பின்​பற்​றப்​பட்​டன என்றும், மாவட்டக் காவல் துறை​யில் இருந்து அழுத்​தம் தரப்​படு​வ​தாக அவர் கூறியது தவறான தகவல் என்றும் விளக்கமளித்தார்.

டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடைநீக்கம் செய்யப்படலாம் என சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசனைப் பணியிடைநீக்கம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DSP Sundaresan | Mayiladuthurai DSP