வில்வித்தைப் பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனியின் மருத்துவச் சிகிச்சைக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளது.
தனக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் சிறிது நாள் தான் உயிரோடு இருப்பேன் என்றும் சமீபத்தில் கூறிய ஷிஹான் ஹுசைனி, தனக்கு நிதியுதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ரூ. 5 லட்சத்துக்கான காசோலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
தமிழ்நாட்டில் நவீன வில்வித்தை வீரர்களை உருவாக்கி டாக்டர் ஷிஹான் ஹுசைனி அவர்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வில்வித்தைக்கு பெறும் பங்களிப்பு செய்து வருகிறார். இவர் 400க்கு மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், தமிழ்நாட்டில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்து ரீகர்வ் வில் (1979) மற்றும் காம்பவுண்ட் வில் (1980) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நவீன வில்வித்தை பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைத்து, மேம்பாட்டிற்கான தரங்களை வடிவமைத்தார். இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீரர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஹுசைனியின் நேரடிப் பயிற்சியின் கீழ் மொத்தம் 100 வில்வித்தை வீரர்கள் மற்றும் 300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஹுசைனியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.