தமிழ்நாடு

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா இடைநீக்கம்: வைகோ நடவடிக்கை! | Vaiko | MDMK | Mallai Sathya

மல்லை சத்யாவின் கருத்துக்​கோ, செயல்பாட்டுக்கோ மதி​முக பொறுப்பேற்​காது.

ராம் அப்பண்ணசாமி

கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கி வைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக முதன்மை செயலாளராக கடந்த 2024-ல் துரை. வைகோ பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து துரை. வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஏப்ரலில் துரை. வைகோ அறிவித்தார். அதற்கு மல்லை சத்யாவே காரணம் என்று கூறப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் வைகோவின் தலையீட்டால், இருவரும் கைகுலுக்கிக்கொண்டு சமாதானம் அடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப்போல, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கடந்த ஜூலை மாதத்தில் வைகோ பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதையொட்டி, மக்​களிடம் நீதி கேட்டு உண்​ணா​விரதப் போ​ராட்​டம் நடத்தப்போவ​தாக அறி​வித்​து, கடந்த ஆக. 2 அன்று சென்னை சிவானந்தா சாலை​யில் தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். குறிப்பாக, துரை. வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

இந்நிலையில், மல்லை சத்யா நீக்கம் தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

`கட்​சி​யின் சட்ட திட்​டங்​களை மீறி ஒழுங்​கீன​மாக நடந்து கொள்வதாக குற்றச்​சாட்டு எழுந்து வரு​வ​தால், மல்லை சி.ஏ. சத்யாவை கட்​சி​யின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் தற்காலிகமாக நீக்கிவைக்க உத்தரவிடப்​படு​கிறது.

ஒழுங்கு நடவடிக்​கைக்கு உட்​பட்டு கட்​சி​யின் உடமை​கள், ஏடு​கள், பொறுப்புகள், கணக்குகள் அனைத்​தை​யும் கட்​சி​யின் பொதுச்செய​ளரிடம் ஒப்​படைக்க வலியுறுத்தப்படுகிறது. அவரது கருத்துக்​கோ, செயல்பாட்டுக்கோ மதிமுக பொறுப்பேற்காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது. மதிமுக தலைமை நிர்வாகி​கள் குறித்து கருத்து பதிவு செய்யக்கூடாது’ என்றார்.