மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணி பொன் வசந்தின் கணவர் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியான நிலையில், மேயர் இந்திராணி பதவி விலகினார்.
மதுரை மாநகராட்சிக்கு கடந்த 2022-ல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வார்டுகளை திமுக கைப்பற்றியதை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த இந்திராணி மேயராகப் பொறுப்பேற்றார். அவரது கணவர் பொன் வசந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த தினேஷ்குமார், மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு நடந்ததாக கடந்தாண்டு காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அதன்பின் மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்றதும், சொத்துவரி முறைகேடு வழக்கு வேகம் பெற்றது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணைக்கு ஆணையர் அனுமதி வழங்கியதை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதில் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக்குழுத் தலைவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் முக்கிய குற்றவாளியாக மேயரின் கணவர் பொன் வசந்த் கடந்த ஆகஸ்ட் 12 அன்று கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 9 அன்று அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மேயர் இந்திராணி பதவி விலகியுள்ளார். துணை மேயர் தலைமையில் மாநகராட்சியின் அடுத்த கூட்டம் வரும் நவம்பர் 17 அன்று நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.