ANI
தமிழ்நாடு

டாஸ்மாக் வழக்கு: ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ராம் அப்பண்ணசாமி

டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில், அந்நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி வரை முறைகேடு நடத்திருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அமலாக்கத்துறையால் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சீல் நடவடிக்கையை திரும்பப் பெறுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்ற விசாரணையின்போது அமலாக்கத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு, இன்று (ஜூன் 20) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

`டாஸ்மாக் முறைகேட்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை.

இதனால், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பொருட்கள் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரவரம்பு இல்லை’ என்று கூறி, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, அமலாக்கத்துறை வழக்கறிஞர் முன்வைத்த கோரிக்கையை ஏற்க, நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.