அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை 10 நாள்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியல் பரப்புரைக்குக் கட்சிகளிடையே பாரபட்சமின்றி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வகுக்கப்படும்வரை எந்தக் கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், விதிமுறைகள் அமைக்கப்படுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் விளக்கினார்.
அதைக் கேட்ட தலைமை நீதிபதி, “இது அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது ஆகாதா? எதன் அடிப்படையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், “எந்தக் கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில் இருந்து தடுக்கப்படுவதில்லை. ரோடு ஷோ மட்டுமே அனுமதிக்கப்படாது” என்று விளக்கினார்..
இதையடுத்து, ”எல்லாக் கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட வேண்டும். விரைந்து வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.
இதற்கு, ”காவல்துறை, மாநகராட்சி, தீயணைப்பு துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறைகளுடன் ஆலோசித்து விதிமுறைகள் வகுக்கப்பட உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று அரசுத்தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 10 நாள்களில் வழிகாட்டு விதிமுறைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 11-க்கு ஒத்தி வைத்தனர்.
The Madras High Court has ordered the government to submit guidelines for road show events of political parties within 10 days.