கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் நிலத்தில், மழை நீரை சேகரிpபு குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள, 160.86 ஏக்கர் நிலத்தை, கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு, 99 ஆண்டுகள் குத்தகைக்கு அரசு வழங்கியது. குத்தகை பாக்கி ரூ. 730.86 கோடியைச் செலுத்தாததால், குத்தகைக்கு அளித்த, ரூ. 6,500 கோடி மதிப்பிலான நிலத்தை அரசு மீட்டது.
அந்த இடத்தில், 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை துறை சார்பில் பசுமைவெளி பூங்கா; மாநகராட்சி சார்பில் மழைநீரை சேமிக்க, நான்கு குளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், இதனை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கெனவே உள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலத்தை மீட்டதற்கு எதிராக ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீரைச் சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:-
“கடந்த 2015-ல் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களையும், உடைமை சேதங்களையும் பார்க்கும் போது, இது போன்ற திட்டங்கள் மாநகரத்திற்குத் தேவை. அரசின் இந்த நடவடிக்கை மூலம் சுற்றுச்சூழல் சம நிலை ஏற்படுவதோடு, காற்று மாசுவை குறைக்க இயலும். காற்று மாசு என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுல்ல, பொதுமக்களின் உடல் நலன் சார்ந்த பிரச்னை. சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலம் என்பது மிகவும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், அரசு நிலத்தை குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போலாகும்” என்றனர்.
The Madras High Court has ordered the construction of rainwater harvesting ponds and an eco-park on the Race Club land in Guindy.