சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

ஆளுநரை அவமதித்த மாணவியின் செயல் ஏற்புடையதல்ல: உயர் நீதிமன்ற மதுரை கிளை | Governor |

இதுபோல் செயல்பட்டவர்கள் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக விதியில் அதிகாரம் உள்ளாதா?

கிழக்கு நியூஸ்

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கடந்த ஆகஸ்ட் 13 அன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, முனைவர் பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப், ஆளுநர் ரவியிடம் பட்டத்திற்கான சான்றிதழைப் பெறாமல், அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் கொடுத்துப் பெற்றுக் கொண்டு மேடையில் இருந்து இறங்கினார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய நிலையில் சர்ச்சை எழுந்தது. அப்போது, ஆளுநர் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களும் எதிராகச் செயல்படுவதால் அவரிடமிருந்து சான்றிதழைப் பெற விரும்பவில்லை என்று மாணவி தெரிவித்தார்.

விசாரணையில், அவர் நாகர்கோவில் நகர திமுக துணை செயலாளர் ராஜன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இந்தச் சர்ச்சையை தொடர்ந்து, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்து அவமதித்த மாணவி ஜீன் ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டம் செய்வதற்கான களம் அல்ல என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பை காக்க வேண்டும். இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும். இதுபோல் செயல்பட்டவர்கள் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக விதியில் அதிகாரம் உள்ளாதா? மனுதாரர் மற்றும் பல்கலைக்கழக வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 18-க்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

The Madras High Court Madurai Branch has stated that it was unacceptable for a student to behave in a way that insulted the Governor at a university convocation ceremony.