தமிழ்நாடு

டாஸ்மாக்: அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் தடை

அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற மூன்று நாள்களின் சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டாஸ்மாக் மதுபானக் கொள்முதல், மதுக்கூடங்கள் ஒதுக்கீடு செய்வது, மதுபானம் விற்பனை உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மார்ச் இரண்டாவது வாரத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் தலைமையகம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மதுபான நிறுவனம் என தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மூன்று நாள்கள் சோதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, கடந்த 13 அன்று சோதனை குறித்து அறிக்கை வெளியிட்ட அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டது. அமலாக்கத் துறையின் இந்தக் குற்றச்சாட்டை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முற்றிலுமாக மறுத்தார்.

அமலாக்கத் துறை சொல்லியிருக்கும் ரூ. 1,000 கோடி முறைகேடு என்பது, எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி விமர்சித்தார். இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்றும் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்தார்.

இவற்றின் தொடர்ச்சியாக டாஸ்மாக் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணை வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பாக அமலாக்கத் துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார்கள். மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யக்கோரி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை மார்ச் 25-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.

எந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அந்த முதல் தகவல் அறிக்கையின் விவரங்களை வெளியிட வேண்டும் என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனை நடைபெற்ற மூன்று நாள்களின் சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.