கோப்புப்படம் 
தமிழ்நாடு

'இந்தியா'வின் வெற்றியை கருணாநிதிக்குக் காணிக்கையாக்குவோம்: மு.க. ஸ்டாலின்

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியாவின் வெற்றியை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குக் காணிக்கையாக்குவோம் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"2023 ஜூன் 3-ல் தொடங்கிய கருணாநிதியின் நூற்றாண்டு 2024 ஜூன் 3-ல் நிறைவடைகிறது. கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

ஜூன் 3 அன்று கருணாநிதியின் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும்.

மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் திமுக மீது தாக்குதல் நடத்துகிறார்கள். திமுக தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.

ஜூன் 4-ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். 'இந்தியா'வின் வெற்றியை கருணாநிதிக்குக் காணிக்கையாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.