மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் தகனம் செய்யப்பட்டது.
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்கோளாரால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், இன்று (ஏப்.9) அதிகாலை காலமானார்.
இதைத் தொடர்ந்து, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில், அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும், குமரி அனந்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
மாலை 4 மணி அளவில், வடபழனியில் அமைந்துள்ள மின் மயானத்திற்கு குமரி அனந்தனின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளும், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள்.
அதன்பிறகு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி வடபழனி மின் மயானத்தில் வைத்து குமரி அனந்தனின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, இறுதி சடங்குகள் நிறைவுபெற்ற பிறகு, அவரது ஊடல் தகனம் செய்யப்பட்டது.