உயர் நீதிமன்றம் ANI
தமிழ்நாடு

விஷச்சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கின் விசாரணை ஜூன் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யோகேஷ் குமார்

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்துள்ளார். சுரேஷின் இறுதிச்சடங்கிற்குச் சென்றவர்களில் பலர் பாக்கெட் விஷச்சாராயம் குடித்து, அவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 49 நபர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஷச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், விஷச்சாராயம் விற்பனையை தடுக்க காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் விஷச்சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் அளித்த வழக்கறிஞர், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். 4 மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் இடமாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து விஷச்சாராய சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.