தமிழ்நாடு

தமிழக உயரதிகாரிகள் மாற்றம்

ராம் அப்பண்ணசாமி

முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் செயலாளராக உள்ள சுப்ரியா சாஹூ மருத்துவத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹூவுக்கு பதில் பி. செந்தில் குமார் வனத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள சுப்ரியா சாஹூ வனத்துறை செயலாளராக இருந்து பல முக்கியத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். 2021-ல் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி அப்போது உச்சத்தில் இருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை திறம்பட சமாளித்தார்.

மேலும் தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள பிரதீப் யாதவ் உயர் கல்வித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திக் விடுப்பில் சென்றுள்ளதால் பிரதீப் யாதவுக்கு உயர் கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் செயலாளராக செயல்பட்டு வந்தார் பிரதீப் யாதவ்.

மேலும் நீர்வளத்துறை செயலாளராக செயல்பட்டுவந்த சந்தீப் சாக்சேனா மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகக் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள மணிவாசன் நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.