வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடன் 7 தொகுதிகள் ஒதுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம் என்று ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக திமுக, கடந்த சில நாள்களாக தனது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. மமக, மதிமுக போன்ற கட்சிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கின்றன.
அதிமுகவில் எப்போது?
மறுபுறம் அதிமுக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு எப்போது நடைபெறும் என்பது கேள்வியாக உள்ளது. இதற்கிடையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ள நிலையில், அவரது வருகைக்குப் பிறகே தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமமுகவின் நிலைப்பாடு
முன்னதாக கடந்த பிப்ரவரி 22 அன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் தொகுதிப் பங்கீடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:- “நான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறேன். அதிமுகவும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறது. எங்களுக்கான தொகுதிப் பங்கீட்டை பாஜக மூலம் கேட்டுப் பெறுவோம். இன்னும் அதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து பாஜகவுடன் பேசுவேன்.” என்று கூறியிருந்தார்.
ஐஜேகே பேச்சுவார்த்தை
இதற்கிடையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐஜேகே கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர் கூறியதாவது:-
“இந்திய ஜனநாயக கட்சியினுடைய தலைவர் ரவி பச்சமுத்துவும் நானும் முன்னாள் முதலமைச்சராக இருந்த, வருங்கால முதலமைச்சர் ஆகவுள்ள எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அதுமட்டுமின்றி தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால், எங்களுக்கு சில தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். குறிப்பாக ஏழு தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். அதனைப் பரிசீலித்து, பாஜகவுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்” என்றார்.
IJK founder Paarivendhar has said that we have asked future Chief Minister Edappadi Palaniswami to allocate 7 seats.