கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதயம் நொறுங்கிப் போய் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மக்களைச் சந்திக்கும் பரப்புரைக் கூட்டம் இன்று நாமக்கல் கேஎஸ் திரையரங்கம் பகுதி மற்றும் கரூர் வேலுச்சாமிபுரம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரசாரத்தைத் தொடங்கியிருக்க வேண்டிய விஜய், அப்போது தான் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றடைந்தார். பிற்பகல் 2.30 மணிக்கு மேல் நாமக்கல்லில் பிரசாரம் செய்தார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாகக் கரூர் சென்றார். இரவு 7 மணிக்கு தான் கரூரில் பிரசாரம் செய்தார். அவர் பிரசாரம் செய்தபோதே பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. விஜய் தனது பேச்சை நிறுத்தி சிலருக்கு தண்ணீர் பாட்டில்களை கொடுத்தார்.
விஜயின் பரப்புரை முடிந்தபிறகு, மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் காரணமாகப் பலர் பாதிப்படைந்தது தெரியவந்தது. கரூர் அரசு மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளார்கள். திருச்சி விமான நிலையம் சென்றடைந்தபோது, விஜயிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். ஆனால், அவர் பதிலளிக்காமல் கடந்துவிட்டார்கள். தற்போது சென்னை வந்தடைந்துள்ளார் விஜய்.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
"இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என்று விஜய் பதிவிட்டுள்ளார்.
TVK Vijay | Karur | Karur Stampede |