கடந்த ஒரு மாதமாக பயங்கர மன உளைச்சலில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் இவ்வாறு பேசினார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே முரண்பாடு நிலவி வரும் நிலையில், அன்புமணி இவ்வாறு பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
"கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல். தூக்கம் இல்லை. எனக்குள் பல கேள்விகளை நான் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏன் மாற்றப்பட்டேன்? எனக்குத் தெரிந்து நான் என்ன தவறு செய்தேன் என எனக்குத் தெரியவில்லை. ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். என் நோக்கம், லட்சியம், கனவு எல்லாமே ஐயாவின் கனவு, லட்சியத்தை நிறைவேற்றுவது தான். இதுதான் என் கனவு. எனக்கு வேறு என்ன கனவு இருக்கப்போகிறது. இவ்வளவு காலமாக ஐயா என்னென்ன சொன்னாரோ அதைச் செய்து முடித்தவன். இனியும் ஐயா என்ன சொல்கிறாரோ அதை மகனாக, கட்சியின் தலைவராக நிச்சயமாக செய்து முடிப்பேன் நான். அது என் கடமை.
நம் இலக்கு என்ன? சமுதாயம் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். கேரளத்தில் ஈழவர் சமுதாயம் தனிப்பெரும் சமுதாயம். அவர்களுக்கு கேரளத்தில் 14% இடஒதுக்கீடு. தமிழ்நாட்டில் வன்னியர்கள் தனிப்பெரும் சமுதாயம். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.
இனி வரும் காலம் நம் காலம். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையோடு அணுக வேண்டும். இதை நாம் எல்லோரும் உணர்ந்து வரும் காலம் நாம் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து நாம் அணுகுவோம், வெற்றி பெறுவோம்.
முதல் வெற்றி 2026-ல் நாம் வெற்றி பெறுபோம். முதல் வெற்றி இது. ஆட்சி அதிகாரம் இருந்தால் தான் நமக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். இல்லையெனில் எல்லோரிடம் கேட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.