முதலமைச்சருக்கு 3 வேளாண் சட்டங்கள் என்றால் என்னவென்று தெரியுமா? அதனால் விவசாயிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று கூற முடியுமா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
“நிரந்தர டிஜிபி நியமனத்தில் திமுக அரசுக்கு தடுமாற்றம் ஏன்? நிரந்தர டிஜிபி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால், எனக்கு அருகதை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகிறார். எனக்கு அருகதை உள்ளது. உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. மாநில அரசு தான் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பான பட்டியலை அனுப்ப வேண்டும். பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழ்நாடு அரசுக்கு கைப்பாவையாக செயல்பட மாட்டார்கள் என்பதனால் தான் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. இதுதான் உண்மை. ஆனால் சட்டத்துறை அமைச்சர், தவறாக இப்படி பேட்டி கொடுப்பது வெட்கக்கேடான விஷயம். இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு எப்படி உருப்படியாகும். உண்மை செய்திகளை மக்களிடம் சொல்ல வேண்டும். மக்களுக்கு ஏதும் தெரியாது என நினைக்கிறார்.
நெல் கொள்முதலில் திமுக அரசின் மெத்தனத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொள்முதல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதி குறைவு என்பதுதான் உண்மை நிலை. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு முறையாக கொள்முதல் செய்யவில்லை. முன்கூட்டியே திட்டமிட்டு பயிர்களை அறுவடை செய்திருந்தால் மழையில் நெல் நனைத்திருக்காது.
காவிரிப் படுகை மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும்போது நாடாளுமன்றத்தில் 100-க்கு 100% வெற்றி என மார்தட்டக்கூடாது. வெற்றி பெற வைத்த மக்களுக்கு செய்ய வேண்டும். விவசாயிகள் வடிக்கும் கண்ணீர் பற்றி தெரியாமல் திரைப்படம் பார்க்க செல்கிறார் முதலமைச்சர்.
4 ஆண்டுகளில் குறுவை சாகுபடி விவசாயிகளை பயிர் காப்பிட்டு திட்டத்தில் இடம்பெறச் செய்யவில்லை. வேளாண் சட்டத்தால் தமிழ்நாடு விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என கூறட்டும். 3 வேளாண் சட்டம் என்ன என்று முதலமைச்சருக்குத் தெரியவில்லை. அவர் சொல்லட்டும் நான் பதில் கூறுகிறேன். கோரிக்கைகளை ஆளுங்கட்சிதான் கேட்டு வாங்க வேண்டும். அதைக்கூட எதிர்க்கட்சிதான் செய்ய வேண்டியிருக்கிறது. காவிரி படுகை மாவட்டத்தை பாலைவனமாக்க முயற்சித்தவர் முதலமைச்சர் ஸ்டாலின். விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசு. நானும் ஒரு விவசாயிதான். சட்டமன்ற உறுப்பினரானது முதல் இப்போது வரை விவசாயம் செய்து வருகிறேன். நெல் ஈரப்பதத்தை 22% ஆக குறைக்கும் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த காரணத்தை கூறவில்லை. சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து, இறந்தவர்கள் பெயரில் வாக்களிக்க வைத்து திமுக முயற்சி செய்கிறது. அது அவர்களுக்கு கை வைந்த கலை ஆகும். சிறப்பு தீவிர திருத்தம் வரக்கூடாது எனத் திமுக அரசு துடிக்கிறது”
Edappadi Palaniswami has questioned whether the Chief Minister knows what the three agricultural laws are and how farmers are affected by them.