https://x.com/EPSTamilNadu
தமிழ்நாடு

தில்லியில் எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு: கோரிக்கை என்ன? | Edappadi Palaniswami | Amit Shah |

முன்னதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார் எடப்படி பழனிசாமி....

கிழக்கு நியூஸ்

தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த புகைப்படங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் அதிமுகவின் உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்தார். மேலும், தில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இதையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தில்லி சென்றுள்ளார்.

முன்னதாக நேற்று (செப். 16) குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அமித் ஷாவையும் இன்று சந்தித்ததாக சமூக ஊடகத்தில் படத்தை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,

"மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வைத் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் ஐயா உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அஇஅதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.