மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி போட்டியிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது பார்த்தசாரதியை ஆதரித்து வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தயாநிதி மாறன், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கானது எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.