மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்த கருத்துகளுக்காக தமிழக காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கோள்காட்டி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்றைக்கு முந்தைய தினம் (ஜூலை 15) நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் வைத்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி., முன்னாள் முதல்வர் காமராஜ் குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்கமாட்டார் என்று பேசியிருந்தார்.
திருச்சி சிவாவின் இந்த கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, திருச்சி சிவா பகிரங்கமான மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன்போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு! அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.
மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்’ என்றார்.