அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கண்டனம் தெரிவித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.22) காலை அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,
1. அண்ணல் அம்பேத்கரை அவதூறு செய்து, அவரது தியாகத்தை இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்சருக்குக் கண்டனம்.
2. ஃபெஞ்சல் புயலில் முன்கள வீரராக நின்று மக்களைக் காப்பாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த பாராட்டு.
3. ஃபெஞ்சல் புயல் பேரிடர் நிதியை, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.
4. ஜனநாயகத்தையும் - “நேர்மையான, சுதந்திரமான” தேர்தலையும் தகர்க்க நினைக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாக்களை மத்திய அரசு முழுமையாகக் கைவிட வேண்டும்.
5. டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுகவையும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட மத்திய பாஜக அரசுக்கும் கண்டனம்.
6. கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் திட்டமிட்டு வஞ்சிக்கும் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைக்குக் கண்டனம்.
7. குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதிலாக, சாதிப் பாகுபாடற்ற “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டும் – வாழ்த்தும்.
8. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி சமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டை பெருமிதத்துடன் கொண்டாடுவோம்.
9. தமிழர் பண்பாட்டுத் திருநாளான பொங்கல் நன்னாளை தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டாடுவோம்.
10. வளர்ச்சிக்கு அடிகோலும் திமுக அர்சின் திட்டங்களை கழக உடன்பிறப்புகள் எடுத்துச் சென்று - “அமைந்ததோர் திராவிட மாடல் நல்லாட்சி- அணிவகுக்கும் மக்கள் நலத் திட்டங்களே அதற்கு சாட்சி” என்று மக்களிடம் விளக்கிட வேண்டும்.
11. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இன்றே புறப்பட கழக உடன்பிறப்புகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
12. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனே விடுதலை செய்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.