தேர்தலில் களமிறங்கும் சுந்தர் சி: புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரையில் போட்டி 
தமிழ்நாடு

தேர்தலில் களமிறங்கும் சுந்தர் சி: புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரையில் போட்டி | Sundar C |

இயக்குநர் சுந்தர் சி ஏற்கெனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஏ.சி. சண்முகத்திற்காக பிரசாரம் செய்தார்...

கிழக்கு நியூஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே உள்ளன. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களை அறிவித்துள்ள அரசியல் கட்சிகள் பிரசாரங்களைத் திட்டமிடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதிமுக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மறுபுறம் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடே இழுபறியில் உள்ளது.

புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள்

இதற்கிடையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதியும், பாஜக சார்பில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நேற்று (மார்ச் 27) செய்தியாளர்களிடம் தெரிவித்த ஏ.சி. சண்முகம், “தாய் வீட்டுச் சீதமாக அதிமுக ஒரு தொகுதியையும், புகுந்த வீட்டுச் சீதனமாக பாஜக ஒரு தொகுதியையும் கொடுத்துள்ளன. அதிமுக ஒதுக்கிய தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்திலும், பாஜக ஒதுக்கிய தொகுதியில் தாமரைச் சின்னத்திலும் போட்டியிடுவோம்” என்று கூறினார். இதையடுத்து அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில், தயாரிப்பாளரும் இயக்குநருமான சுந்தர் சி போட்டியிட உள்ளதாக ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் சுந்தர் சி

இது தொடர்பாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது. மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் சுந்தர் சி. சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். 30.3.2026 திங்கட்கிழமை அன்று பாஜக சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம் இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

2024-ல் பிரசாரம் செய்த சுந்தர் சி

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் சுந்தர் சி. அண்ணாமலை, அன்பே சிவம் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களின் படம் உட்பட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவர் இயக்கி 13 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் வெளியான மதகஜராஜா படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அதிலிருந்து விலகினார். தற்போது விஷால், தமன்னா நடிப்பில் புருஷன் படத்தை இயக்கி வருகிறார். இவரது மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பு பாஜகவில் உள்ளார். இந்நிலையில் புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுந்தர் சி ஏற்கெனவே ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.

New Justice Party leader AC Shanmugham announced that director Sundar C is going to contest on behalf of his party in one of the constituency allocated for their party in NDA.