சென்னையில் புதிதாக தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்தச் சேவையை இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
சென்னையில் பெரும்பாக்கம் மின்சாரப் பேருந்து பணிமனை ரூ. 49.56 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதை இன்று திறந்து வைத்தார். மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ. 233 கோடி மதிப்பில் 135 தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இவற்றில், 55 பேருந்துகள் தாழ்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள். உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்ததன் மூலம், இந்தச் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உடனிருந்தார்.
முதற்கட்டமாக, 55 குளிர்சாதன மின் பேருந்துகள் 6 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 55 குளிர்சாதன மின் பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படும், குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகள் படிப்படியாக பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் - சிறுசேரி ஐடி பூங்கா இடையே வழித்தடம் எண்: MAA2-ல் 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - திருவான்மியூர் இடையே வழித்தடம் எண்: 95X-ல் 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - சோழிங்கநல்லூர் இடையே வழித்தடம் எண்: 555s-ல் 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தியாகராய நகர் - திருப்போரூர் இடையே வழித்தடம் எண்: 19-ல் 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிராட்வே - கேளம்பாக்கம் இடையே வழித்தடம் எண்: 102-ல் 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு - கேளம்பாக்கம்/சிறுசேரி ஐடி பூங்கா இடையே வழித்தடம் எண்: 570/570s-ல் 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
AC Electric Bus | Udhayanidhi Stalin | AC Bus | MTC | Chennai